தேவன் பிறந்த நாள் விழா - அவரது ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆழ்வார்பேட்டை சிவகாமி பெத்தாச்சி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
தேவனின் ரசிகர்கள் - வாசகர்கள் சுமார் நூறு பேர் வந்திருந்தார்கள். தேவன் அறக்கட்டளை சார்பில் சாருகேசி வரவேற்புரை நிகழ்த்தினார். அசோகமித்திரன் நூல்களை [கல்யாணி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், சி.ஐ.டி. சந்துரு, லக்ஷ்மி கடாட்சம்] வெளியிட்டுப் பேசினார். வண்ணநிலவன் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார். பத்ரியின் நன்றியுரைக்குப் பிறகு நாடக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அசோகமித்திரனின் நேற்றைய பேச்சு அநேகமாக அவருக்கே புதிய அனுபவமாக இருந்திருக்கும். அரைமணிநேரமெல்லாம் அவர் நின்று பேசி நான் கண்டதில்லை. அரை நிமிடம் பேசுவார். அல்லது அரை வினாடி. நேற்று என்ன தோன்றியதோ, தேவனைப் பற்றி, அவர் எழுத வந்த காலகட்டம் பற்றி, ஆனந்த விகடன் பற்றி, [எழுத்தாளர்] கல்கி பற்றி, கல்கியிடம் தேவன் பணியாற்றியது பற்றி, இருவருக்குமான உறவு பற்றி, கல்கி விகடனிலிருந்து வெளியேறிய சூழல் பற்றி, எஸ்.எஸ். வாசனின் குணநலன்கள் பற்றி, தேவனது நூல்கள் எதுவும் அவர் உயிருடன் இருந்தபோது வெளிவராததன் காரணம் பற்றி - இன்னும் ஏராளமான தகவல்கள் அவரது பேச்சில் வெளிப்பட்டன.
தேவன் வாசனிடம் பணியாற்றிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் அசோகமித்திரன் அதே வாசனின் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றியிருக்கிறார். எனவே அனைத்துச் சம்பவங்களுக்கும் அவர் நேரடி சாட்சி. அனைவரும் வாசனை ‘பாஸ்’ என்று அழைத்துக்கொண்டிருந்தபோது தேவன் மட்டும் ‘எஜமான்’ என்று அழைப்பார் போன்ற தகவல்கள் புதிது.
தேவன் உயிருடன் இருந்தபோது அவருடைய ஒரு புத்தகம் கூட வெளிவராததற்கு இன்றளவும் விகடனைக் குறை சொல்லும் பெருங்கூட்டம் ஒன்றுண்டு. அசோகமித்திரன் நேற்று பேசியபோது சொன்ன சில தகவல்கள் ஆச்சர்யமளித்தன. தேவன் வாசனிடம் ஒருவார்த்தை கேட்டிருக்கலாம். நிச்சயம் அவர் மறுத்திருக்க மாட்டார். அவரது சுபாவம் அதுவல்ல என்று அசோகமித்திரன் சொன்னார். கல்கி விகடனில் இருந்தபோதே அவருடைய ‘கணையாழியின் கனவு’ போன்ற நூல்கள் வெளிவந்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு நிறுவனம் சார்ந்த எழுத்தாளராக இருப்பதில் உள்ள பிரச்னைகள் குறித்து அசோகமித்திரன் தொட்டுக்காட்டிய விதம் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. யாருக்கும் வலிக்காமல், யாரையும் குற்றம் சொல்லாமல், யார் மீதும் பழி சுமத்தாமல் சரித்திரத்தின் சில பக்கங்களைத் தப்பர்த்தம் தராமல் எடுத்துக் காட்டுவது பெரிய கஷ்டமான காரியம். அசோகமித்திரன் நேற்று அதை மிக அநாயாசமாகச் செய்தார்.
கல்கியில் பணியாற்றியவன் என்கிற வகையில் அசோகமித்திரன் சொன்ன பல தகவல்கள் எனக்கு ஏற்கெனவே தெரியும். ஆனாலும் தெரிந்த தகவல்கள் பலவற்றின் மறுபக்கத்தை நேற்று கேட்க அல்லது உணர முடிந்தது.
விழாவுக்கு வலை உலக நண்பர்கள் சிலரும் வந்திருந்தார்கள். ஆனால் அதிகம் பேச முடியவில்லை. ஒரு அவசர காரியமாகப் பாதியில் நாடக வாசிப்பு நிகழ்ச்சியின்போது கிளம்பும்படி ஆகிவிட்டது. ஒரு மாதம் திட்டமிட்டு அமர்ந்து தேவனின் அனைத்து நூல்களையும் மொத்தமாகப் படிக்கவேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். தேவனைப் பற்றி ஒரு நல்ல நூல் எழுதவும் ஆள் தேடவேண்டும்.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

