ஆர்குட்டில் என் வாசகர் குழுமம்

ஆர்குட்டில் எனக்கொரு வாசகர் குழுமம் தொடங்கப்பட்டிருப்பதை நேற்று கண்டேன்.

பொதுவாக எனக்கு ஆர்குட் என்றால் அலர்ஜி. முன்பொரு சமயம் நண்பர்கள் அறிமுகப்படுத்தியபோது உள்ளே சென்று பார்த்திருக்கிறேன். பெரிதாக ஆர்வம் கவரவில்லை. வெளியேறி விட்டேன்.

பின்பு என்னுடைய ஜிமெயில் முகவரி களவு போன சமயம், ஒரு போலி ஆர்குட் முகவரியை நான் க்ளிக் செய்து உள்ளே சென்று கடவுச்சொல் கொடுத்ததுதான் காரணம் என்று நண்பர் இட்லிவடை சொன்னார்.

அதிலிருந்து மறந்தும்கூட ஆர்குட் பக்கம் போவதில்லை. எது போலியோ, எது உண்மையோ? யார் கண்டது?

இப்போது இந்த வாசகர் குழுமம் பற்றி அறிந்து, மீண்டும் உள்ளே சென்று பார்க்க, பலப்பல எழுத்தாளர்களுக்கான குழுமங்கள் ஆர்வமுடன் இயங்குவதைக் கண்டேன்.

என்ன ஒரே பிரச்னை, ஆர்வத்தில் புத்தகங்களையெல்லாம் பத்து பைசா செலவில்லாமல் Print PDF போட்டு நாட்டுடைமை ஆக்கிவிடுகிறார்கள். படித்துவிட்டு ஆளுக்கு நாலு வரி பாராட்டியும் விடுகிறார்கள். இணையத்தில் இது தவிர்க்க முடியாதது என்பது புரிகிறது. ஒன்றும் செய்வதற்கில்லை.

சம்பந்தப்பட்ட இந்த ரசிகர் குழுமம் எனது டிரேட் மார்க்கான ;-) ‘கோயிஞ்சாமி’யைக் கூட விட்டுவைக்கவில்லை. குகனொடு ஐவரானது மாதிரி கோயிஞ்சாமியுடன் ஐக்கியமாகியிருக்கிறார்கள்.

மங்களம் உண்டாகட்டும். இவர்களுடைய முகவரி இங்கே உள்ளது.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!


You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

AddThis Social Bookmark Button

11 Responses to “ஆர்குட்டில் என் வாசகர் குழுமம்”

  1. vinothkumar.j Says:

    வெகுநாளா இருக்குங்களே சார்! இப்பத்தான் தெரியுமா உங்களுக்கு?

  2. //நண்பர் இட்லிவடை//
    நண்பர் என்று சொல்கிறீர்கள், யாரென்றும் சொல்லி விடலாமே ? நன்றி :)

    அது போல, தங்கள் இ.வ குறித்த விமர்சனத்தில் நண்பர் என்றும் “பாரா”மல் இட்லிவடையை “பொழுது போகாதவர்” என்று விளாசியிருப்பது நியாயமா ? ;-)

    அப்பாடா, இன்னிக்கு ஒண்ணை கிளப்பி விட்டாச்சு, நம்ம வேல முடிஞ்சது!

  3. மடிப்பாக்கம் புள்ளையார் கோயில் தெருவில் உங்களுக்கு ஒரு ரசிகர்மன்றம் ஆரம்பிக்கலாமா? எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்தால் சொல்லுங்கள் ஜமாய்ச்சுடலாம் :)

  4. சார்.. twitter ல் நீங்களும் சொக்கனும பண்ணும் அலும்பு தாங்கல சார்.. நெஜமாவே கூடிய விரைவில் உங்களிருவருக்கும் கவியரங்கத்திற்கு அழைப்பு வரலாம்.. எல்லாத்துக்கும் தயாரா இருந்துக்கோங்க.. :) :)

  5. நான் தொடங்கிய அன்றே உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன் , நீங்கள் பதில் போடவில்லை . அப்பறம் பா.ரா இருக்கும் பிசிக்கு அவர் நம்மை போன்ற “கோயிஞ்சாமியை ” கண்டுகொள்ளமாட்டார் போல என விட்டு விட்டேன் .

    ஆனால் இந்த PDF வடிவங்கள் நாங்கள் வேண்டுமென்று கொடுப்பதில்லை . அது இணையத்தில் இருப்பதை சேர்ந்த வாக்கில் கொடுக்கிறோம் , உங்களது அனைத்து புத்தகங்களையும் எனது சொந்த செலவுகளை ஒத்தி வைத்து விட்டு காசு கொடுத்து வாங்கி படிச்ச்சவனாக்கும். எனது கணினியை ஒரு கொடூர வைரஸ் தாக்கியதால் தாமதமான பதில்கள் .

    புது பொலிவுடன் மின்ன போகிறது எங்கள் குழுமம் , யுத்தம் சரணம் வந்தவுடன் . நானும் மற்றும் எனது கல்லூரி நண்பர்களும் சேர்ந்து ஆரம்பித்தது , என்னுடன் சேர்த்து என் நண்பன் கதிரவனும் உங்கள் வெறியன் தான் . இன்று உங்கள் வாசகர்கள் 65 பேர் உள்ளோம் . நாங்கள் தனி நபர் தாக்குதலில் ஈடுபடாமல் , சாதரணமாக உங்கள் புத்தகங்களை பற்றி விவாதிப்பதே பெரிய விடயம் . எப்படின்னா , வேறு குழுமங்களை உங்கள் கண்ணுக்கு காமித்தால் தான் புரிய வரும்

    ஆமாம் ” எதேஷ்டம் ” என்பதும் உங்கள் டிரேட் மார்க்கான வசனம் தான் . நீங்கள் வருத்தம் தெரிவிப்பது எங்களுக்கும் கஷ்டமாக உள்ளது , ஆனால் இணையத்தில் என்னால் இச்செயல்களை தடுக்க இயலாது . உங்கள் அனைத்து படைப்புகளையும் காசு கொடுத்து வாங்கி படிக்கும் தனி மனித ஒழுக்கம் தான் என்னால் உங்களுக்கு செய்ய முடிந்தது

  6. தங்களது ரசிகர்களில் ஒருவர் என்ற வகையிலும், நீங்கள் சுட்டியிட்ட அந்தக் குழுமத்தின் உறுப்பினர் என்ற முறையிலும், தங்களுக்கு நன்றி.

    உங்களது எளிய நடை, புரியவைக்கும் தன்மை, மெல்லியை நகையோடும் எழுத்துக்கள், உங்களைப் போன்றவர்கள் எங்களுக்கு ஆசிரியராய் இருந்திருந்தால், வரலாற்றைக் கூட இன்பமாய்க் கற்றுக் கொண்டிருப்பேன் என்று என் நண்பர்களிடையே கூறுவேன். ஆம் முற்றிலும் உண்மை.

    தங்களின் அனைத்துப் படைப்புகளையும் படித்து ரசித்து இதோ நீங்கள் தொடங்கப் போகும் யுத்தம் சரணம் கச்சாமிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

    தாங்கள் எங்கள் ஆர்குட் குழுமத்திற்கு அடிக்கடி வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  7. Pakeer Arafath Says:

    மரியாதைக்குரிய பா ரா அவர்களுக்கு.

    நீங்கள் குறிப்பிட்ட குழுமத்தில் நானும் ஒரு அங்கம். நான் எதேச்சையாக குமுதம் ரிப்போட்டரில் உங்கள் டாலர் தேசம் படிக்க நேர்ந்தது. அன்று முதல் நான் உங்கள் ரசிகன். இன்று வரை தவறாமல் அனைத்து தொடர்களையும் படித்திருக்கிறேன். அமெரிக்காவையும், இராக்கையும், மத்திய கிழக்கையும் மற்றும் பல உலக அரசியலையும் உங்கள் மூலமாக தான் அறிந்து கொண்டேன்.

    ஆனால் ஒரு குறை கணினி பொறியாளராக பணியாற்றும் என் நண்பர்கள் பலருக்கு உங்களை தெரியாமல் போயிருந்தது. உங்களை அறிமுக படுத்த இந்த குழுமம் தான் எனக்கு ரொம்ப உதவியது. இன்று என் நண்பர்கள் பலருக்கு உங்களை தெரியும். உங்கள் படைப்ப்புகளை தெரியும். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் உள்ள பிரச்சனை தெரியும், இன்னும் சில பல உலக அரசியல் தெரியும். இது இன்னும் தொடரும். ஆனால் நீங்கள் வருத்தம் தெரிவிப்பது எங்களுக்கும் கஷ்டமாக உள்ளது.

    உங்கள் அனைத்து படைப்புகளையும் நான் PDF ல் படித்தது இல்லை. காசு கொடுத்து வாங்கி தான் படித்திருக்கிறேன்.

  8. அன்புள்ள பிரகாஷ், சுரேஷ், பக்கீர் அரஃபாத்,

    உங்களது அறிமுகமும் ஆர்வமும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. புத்தகங்களை பிடிஎஃப் வடிவில் படிப்பது குறித்து நான் குறிப்பிட்டிருப்பதை ஜாலியாக மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு முழு புத்தகத்தை பிடிஎஃப்பில் படிப்பது எத்தனை கொடுமையான காரியம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் எழுதும் புத்தகங்களின் சைஸைப் பார்க்க, அது ஒரு பிரம்மபிரயத்தனம்.அப்படியும் விடாது கறுப்பாக பிடிஎஃப்பாகவே படித்து முடிக்க ஒருவர் முடிவு செய்து, படித்தும் தீருகிறார் என்றால் அவருக்கு நான் கோயில் கட்டவேண்டும். என்னுடைய புத்தகங்களை பிடிஎஃப்பாக்கி இணையத்தில் வினியோகிப்பதன்மூலம், புத்தக விற்பனை பாதிப்படைந்து, நான் கலைஞர் கருணாநிதிக்குத் தெரியாமலேயே நாட்டுடைமை ஆக்கப்பட்டுவிடுவேனோ என்றெல்லாம் எனக்கு அச்சமில்லை. சும்மா ஒரு தமாஷுக்குத்தான் அப்படிச் சொன்னேன். தீவிரமான வாசகர்கள் ஒருபோதும் புத்தகங்கள் வாங்குவதை நிறுத்தப்போவதில்லை. பிடிஎஃப் காதலர்கள் ஒரு புத்தகத்தையும் முழுக்கப் படித்து முடிக்கப் போவதுமில்லை! எனவே, கவலையே படாதீர்கள்.

  9. Pakeer Arafath Says:

    உங்கள் பதிலுக்கு நன்றி…

    தங்களுடைய மாய வலை எப்போது புத்தக வடிவில் வரும்?

    வாங்கி படிக்க ஆவலுடன் இருக்கிறோம்…

  10. Dear Arafat,

    Pl. read this page: http://www.writerpara.net/archives/69

  11. //ஒரு முழு புத்தகத்தை பிடிஎஃப்பில் படிப்பது எத்தனை கொடுமையான காரியம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் எழுதும் புத்தகங்களின் சைஸைப் பார்க்க, அது ஒரு பிரம்மபிரயத்தனம்.அப்படியும் விடாது கறுப்பாக பிடிஎஃப்பாகவே படித்து முடிக்க ஒருவர் முடிவு செய்து, படித்தும் தீருகிறார் என்றால் அவருக்கு நான் கோயில் கட்டவேண்டும். என்னுடைய புத்தகங்களை பிடிஎஃப்பாக்கி இணையத்தில் வினியோகிப்பதன்மூலம், புத்தக விற்பனை பாதிப்படைந்து, நான் கலைஞர் கருணாநிதிக்குத் தெரியாமலேயே நாட்டுடைமை ஆக்கப்பட்டுவிடுவேனோ என்றெல்லாம் எனக்கு அச்சமில்லை. //

    சீரியஸான நடையில் காமெடி எழுதுவது உங்களுக்கு கைவந்த கலை! உங்கள் புத்தகங்களிலும் இதே நெடி அவ்வப்போது வெளிப்படுகிறது :)

Leave a Reply