ஓர் அறிவிப்பு

இந்தத் தளத்தின் வலப்பக்கத்தில் ஒரு புதிய பகுதியை நீங்கள் காணலாம். இனி [கூடியவரை] தினசரி ஒரு நல்ல பாடலை இங்கே வழங்கலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். சில கட்டுரைகளைப் பேச்சு வடிவிலும்கூட. உரையாடலாகச் சில விஷயங்களைத் தந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. யாருடனாவது உரையாடி, தொகுத்து வழங்கும் திட்டம். எல்லாம் என்னுடைய தொழில்நுட்ப [அஞ்]ஞானம் எத்தனை கைகொடுக்கிறது என்பதைப் பொறுத்தது. இன்னும் ஆடியோ எடிட்டிங் பிடிபடவில்லை. சொதப்புகிறது.

பாடல்களைப் பொருத்தவரை, அவற்றின் தேர்வு முற்றிலும் என் ரசனை சார்ந்ததாகவே இருக்கும். அவசியமானவற்றுக்கு ராக / தாள விவரங்களையும் தரலாம். ரேடியோஸ்பதி - சே, றேடியோஸ்பதி செய்கிற காரியத்தையெல்லாம் பார்த்தால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை. எளிய ஆசை. அவ்வளவே.

இப்போது ஓடிக்கொண்டிருக்கும் பாடல் ‘இசையில் தொடங்குதம்மா’ ஹே ராம் படத்தில் இடம்பெற்றது. ஹம்சநாதத்தில் அமைந்த இந்தப் பாடல், அந்த ராகத்தின் சகல அழகையும் விரித்து வைக்கிறபடியால் எனக்கு முக்கியமாகிறது. அநேகமாக நான் தினசரி கேட்கிற ஒன்று. இதே ராகத்தில் இதே இளையராஜா இசையமைத்த மிகச் சாதாரணமான ஒரு பாடல், இதைக் காட்டிலும் பிரபலமானது. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா?

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!


You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

AddThis Social Bookmark Button

22 Responses to “ஓர் அறிவிப்பு”

  1. ஆயில்யன் Says:

    நல்ல முயற்சி :)

    அயல்நாடு இடம்மாறிய பிறகு பாடல்களிலேயே பாதி வாழ்க்கை பழகிப்போயிருக்கிறது:))

    வாழ்த்துக்கள்!

  2. ஆயில்யன் Says:

    வெளிநாட்டு வாழ்க்கைக்கு வாக்கப்பட்ட பிறகு பாதி நாட்கள் பாடல்களிலேயே பழகிக்கொண்டிருக்கிற எம்மை போன்றோருக்கு ஒரு நல்ல தேர்வாக அமையும் என்று எதிர் பார்க்கிறேன்!

    வாழ்த்துக்கள்:)

    //றேடியோஸ்பதி செய்கிற காரியத்தையெல்லாம் பார்த்தால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை//

    நிச்சயம்! கிட்டதட்ட 5 - 7 மணி நேரங்கள் செலவழித்து பின்ணணி இசை அளிக்கும் நண்பரின் பணி பாராட்டுக்குரியது :))

    //சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா?//

    நண்பர் கானா பிரபாவின் வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பில் எப்பொழுதும் முதன்மையாக வருவதும் இந்த பாடல் என்பது ஒரு எக்ஸ்ட்ரா நியூஸ் :))

  3. Hello,

    Good initiative in introducing good music to masses!

    Just a note, I like the form and content of the books from Kilakku pathiphagam. Keep up the excellent work !!

  4. வாழ்த்துக்கள்! ஸ்டார்ட் மீசிக்

  5. ரோஸாவசந்த் Says:

    என்னது சொர்கமே என்றாலும் சாதாரண பாடலா?! சரி, நாந் எதும் பேசல.

  6. அன்புள்ள ரோஸா,

    சொர்க்கமே என்றாலும் ஓர் அசாதாரணமான பாடல் என்று நீங்கள் கருதுவீர்களானால், தயவுசெய்து அதனை விளக்குங்கள்! பல சமயம் எனக்கு இந்தப் பிரச்னை வருகிறது. ஒரு பாடல் லட்சக்கணக்கானோரால் ரசிக்கப்படுகிறது. திரும்பத் திரும்பக் கேட்கப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. நானேகூட சுய நினைவின்றிப் பாடிக்கொண்டிருப்பேன். ஆனால் அதன் கட்டமைப்பு மிகச் சாதாரணமானதாகவும் படைப்பூக்கமில்லாமல் உருவாக்கப்பட்டது போலவும் தோற்றமளிக்கிறது. திரை இசையைப் பொருத்த அளவில், ஒருபாடல் பிரபலமடைய, ஜனரஞ்சகமான ஒரு ராகத் தேர்வு [மினிமம் கேரண்டி ராகங்கள்: ரீதிகௌளை, ஹம்சத்வனி, கல்யாணி, ஹம்சநாதம், அம்ருதவர்ஷினி, கல்யாண வசந்தம், சிம்மேந்திர மத்தியமம், ஷண்முகப்ரியா] - சற்றே வேகம் கூடிய தாளக்கட்டு இருந்தாலே போதுமோ என்றுகூட அவ்வப்போது தோன்றும்.

    ஆனால் கலாபூர்வமாக மாபெரும் சாதனைகளைத் தன்னகத்தே கொண்ட சில அபாரமான பாடல்கள் காலம் கடந்து நிற்பதைப் பார்க்கையில் இந்த மலை-மடு வித்தியாசம் எனக்குப் பெரும் குழப்பமும் அதிர்ச்சியும் ஏற்படுத்துகிறது.

    நான் இசை வல்லுனனல்லன். எனக்கு அதன் ஆழ அகலங்கள் தெரியாது. மிக எளிய, பாமர அறிவு மட்டுமே கொண்டவன். ஆனால் என் ரசனையில் பெரிய பழுதில்லை என்று ஒரு நம்பிக்கை எப்போதுமுண்டு.

    சொர்க்கமே என்றாலும் ஒரு நல்ல பாடல் என்று பரவலாக நினைக்கப்படுவதற்கு நான் கருதும் ஒரே காரணம் இதுதான்: ஹம்சநாதத்தை ஃபாஸ்ட் பீட்டில் இதற்குமுன் நாம் கேட்டதில்லை.

    நீங்கள் இசையில் தொடங்குதம்மாவையும் இதையும் அடுத்தடுத்துச் சில முறை கேட்பீர்களானால் புரியும்.

  7. Very Nice effort Sir!

  8. பாரா, ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ கூட ஹம்ஸானந்திதானே?

  9. சினிமாப் பாடல்கள் மட்டுமல்லாது கர்நாடக இசையையும் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்!

  10. பிரகாஷ்

    தென்றல் வந்து என்னைத்தொடும், சொர்க்கமே என்றாலும், இசையில் தொடங்குதம்மா எல்லாமே ஒரே ராகம்தான். ஆனால் ஹம்ஸானந்தி அல்ல. ஹம்ஸநாதம்.

  11. பிரகாஷ்:

    நீங்கள் கொடுத்த வெங்கட்டின் கட்டுரைச் சுட்டிக்கு நன்றி. என்ன அழகாக ரசிக்கிறார்! ஆனால் அதிலுள்ள மூன்று அன்னப்பறவைகள்தான் பறக்கமாட்டேனென்கின்றன;-)

  12. இலவசம்:

    கர்நாடக சங்கீதம் இப்போது உத்தேசத்தில் இல்லை. சினிமாப்பாடல்கள்தான். அதுவும் குறிப்பாக இளையராஜா. வந்தபுதிதில் கவனிக்கத் தவறிய அழகுகளை இப்போது திரும்ப எடுத்து ரசிக்கலாம் என்பது திட்டம். உருப்படாதது நாராயணன் ஒரு சிடி கொடுத்தார். அநேகமாக இளையராஜாவின் அனைத்து மெலடிகளும் அதில் இருக்கின்றன. கேட்டுக்கொண்டே இருக்கிறேன். கவனத்தைச் சுண்டி இழுக்கும் இடங்களை கவனமாகக் குறித்து வைக்கிறேன். அதிலிருந்துதான் இங்கே அளிக்கத் திட்டமிட்டிருக்கிறேன்!

  13. ஒரு சுத்து வழி :

    இளையராஜாவின் மூன்று அன்னங்கள்

    மயிலே மயிலே, உன் தோகை எங்கே
    ராத்திரியில் பூத்திருக்கும்
    ஓம் நமஹ

  14. பிரகாஷ் [எ] எமகாதகனுக்கு

    பிடித்துக் கொடுத்ததற்கு நன்றி. மூன்றையும் படித்துவிட்டேன். அற்புதம். ஓம் நமஹவை, வெங்கட்டின் விளக்கங்களைப் படித்துக்கொண்டே கேட்டது மிகுந்த கிளர்ச்சியூட்டக்கூடியதாக இருந்தது.

  15. தென்றல் வந்து என்னைத்தொடும், சொர்க்கமே என்றாலும், இசையில் தொடங்குதம்மா எல்லாமே ஒரே ராகம்தான் - அது ஸாரங்க தரங்கிணி ராகம். ஹம்ஸானந்தி அல்ல. ஹம்ஸநாதமும் அல்ல.

    ஸாரங்க தரங்கிணியின் ஆரோஹண்ம்/அவரோஹணம் இதோ:
    S R2 M2 P D2 N3 S | S N3 D2 P M2 R2 S.
    திரு. ஜி.என்.பாலசுப்ரமணியம் அவர்கள் இந்த ராகத்தில் ‘ஸமானரஹிதே’ என்று ஒரு பாடல் இயற்றியுள்ளார். MLV அதனை ப்ராபல்யப்படுத்தினார்.

  16. திரு. பாரா,
    இளையராஜாவின் ஆரம்பகால பாடல்கள் கர்நாடக இசை கச்சேரிகளில் அறிதான சில நல்ல ராகங்களில் அமைந்துள்ளது. அவைகளை இங்கே விவாதிக்கலாமா?

  17. நல்ல முயற்சி…. (இதனால ஏதும் பைரசி பிராப்ளம் வராதே?) :-)

  18. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், கூடவே குறித்த பாடல் குறித்த உங்கள் சிலாகிப்பையும் வெளிப்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒரே பாடலை ரசிக்கும் விதங்களே தனி.

  19. சொர்க்கமே என்றாலும் பாடல் பிரபலமானதற்கு இசையோ, ராகமோ மட்டும் காரணமல்ல. பாடல் வரிகளும் தான்.

    வெளிநாட்டில் வ(வெ)ந்து கிடக்கும் (?!) பலருக்கும் தோன்றும் மிகச் சாதாரண உதாரணங்களை பாடலாக்கியதால் தான் அது ஹிட்.

    ‘ஓ போடு’ பாடல் எப்படி ஹிட் ஆகிற்று? அதே போல தான்!

  20. இந்த பாடலைப் பாடியவரின் குரல்வளம் வியக்கத்தக்க ஒன்று…..பண்டிட் அஜய் சக்ரபொர்த்தி, புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி மற்றும் பெங்காலி பாடகர்…..கமலஹாசனின் பாடகர் தேர்வு என்னை வியக்க வைக்கிறது.

  21. தென்றல் வந்து என்னைத்தொடும், சொர்க்கமே என்றாலும், இசையில் தொடங்குதம்மா எல்லாமே ஒரே ராகம்தான் - அது ஸாரங்க தரங்கிணி ராகம். ஹம்ஸானந்தி அல்ல. ஹம்ஸநாதமும் அல்ல./////

    எனக்கு தெரிந்தவரை தென்றல் வந்து என்னைத் தொடும் பாடல் ஹம்ஸநாதத்தின் அடிப்படையிலமைந்ததே…..ஸாரங்க தரங்கிணியா அல்லது ஸாய தரங்கிணியா??

Leave a Reply